
இந்தியாவின் கடற்பகுதியில் மீன்பிடியில் ஈடுபட்டிருந்த இரண்டு இலங்கைப் படகுகளை இந்திய கடலோர பொலிசார் பறிமுதல் செய்துள்ளனர்.
இந்த படகுகள் கடந்த வாரம் பறிமுதல் செய்யப்பட்டிருப்பினும், தற்போதே அவை கொச்சின் பொலிஸ் நிலையத்துக்கு எடுத்துவரப்பட்டுள்ளன.
இந்தியாவின் லட்சத்தீவுக்கு அருகில் உள்ள மினிக்காய் தீவுக்கு அருகில் வைத்தே இந்தப் படகுகள் கைபற்றப்பட்டுள்ளன. இதில் இருந்த 11 இலங்கை மீனவர்களும் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
அவர்கள் கைது செய்யப்பட்டதன் பின்னர், கடலோர பொலிசாரின் மீரா என்ற கப்பலின் மூலம் கொச்சிக்கு அழைத்து வரப்பட்டுள்ளனர். அத்துடன் அந்த படகுகள் இரண்டும் இன்று பொலிசாரிடம் ஒப்படைக்கப்படும் என தெரிவிக்கப்படுகிறது.
அதேவேளை, இந்திய மீனவர்கள் இலங்கை எல்லையைக் கடக்கும் சம்பவங்கள் அதிகளவில் நடைபெறுவதாக மீன்பிடித்துறை அமைச்சர் நியோமல் பெரேரா தெரிவித்துள்ளார்.
இந்திய மீன்பிடிப்படகுகள் அதிக அளவில் இலங்கை கடல் எல்லையை கடந்து வருகின்ற போதும், அவற்றை கைப்பற்ற இலங்கை நடவடிக்கை எடுக்கவில்லை என அவர் தெரிவித்துள்ளார்.
கடந்த வருடத்தில் மாத்திரம் இலங்கையின் 116 மீன்பிடி படகுகள் கைப்பற்றப்பட்டுள்ளதாக இந்திய மத்திய அரசாங்கம் அண்மையில், அறிவித்திருந்தது.
இலங்கை மீனவர்கள் இந்திய கடல் எல்லையை கடப்பது இந்தியாவின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக கணிக்கப்படுவதாக மத்திய அரசாங்கத்தின் அறிக்கை ஒன்றில் தெரிவிக்கப்பட்டிருந்தது.
எவ்வாறாயினும் இலங்கை மீனவர்கள் இந்திய கடல்பகுதிக்கு சட்டவிரோதமாக நுழைவதற்கு நிகராக, இந்திய மீனவர்கள் இலங்கை கடற்பகுதியிலும் நுழைவதாக அவர் தெரிவித்துள்ளார்.
இலங்கை மீனவர்கள், மிகப்பாரிய பிரச்சினையாக மாறியுள்ளதாக இந்தியா முன்வைக்கும் குற்றச்சாட்டுத் தொடர்பில், எமது செய்திப்பிரிவு வினவியபோது அமைச்சர் நியோமல் பெரேரா இதனை தெரிவித்தார்