
மன்னிக்கனும், நம்பிக்கையூட்டும் கருத்து ஒன்றையேனும் என்னால் சொல்ல முடியவில்லை..
நடராசா சுசீந்திரன்
நடராசா சுசீந்திரன் அவர்கள் இலங்கையின் வடக்கே நெடுந்தீவில் பிறந்தவர். 1980களிலிருந்து ஜெர்மனியில் வசிக்கும் இவர் அரசு அங்கீகாரம் பெற்ற மொழிபெயர்ப்பாளர். அரசியல், இலக்கியம், மனிதகுல வரலாறு ஆகிய தளங்களில் தொடர்ந்து பங்களிப்பை நிறுவி வருபவர். பெர்டொல்ட் பிறெஹ்ட், குந்தர் கிராஸ், ஹைன்றிஸ் பொல், எறிக் பிறீட் போன்றவர்களது படைப்புக்களை தமிழுக்கு மொழியாக்கம் செய்துள்ளார். அதுபோலவே பல்வேறு தமிழ்ப் படைப்பாளிகளை ஜெர்மன் மொழிக்கு அறிமுகப்படுத்திய பெருமைக்குரியவர்.
இலங்கை அரசியலில் மிகுந்த ஈடுபாட்டோடு இயங்கும் இவர் பல்வேறு சர்வதேச மாநாடுகளில் கலந்துகொண்டு இலங்கையின் அரசியல் யாப்பு, சமஸ்டி அடிப்படையிலான நிரந்தரத் தீர்வு, மனித உரிமைமீறல்கள் குறித்து ஆய்வுக் கட்டுரைகளை சமர்ப்பித்துள்ளார்.
போரற்ற இலங்கையில் அரசியல் யாப்பின் பாரிய மாற்றம், தேர்தல் தொகுதிகள், மாகாணங்களின் மறுசீரமைப்பு போன்றவற்றை அடிப்படையாகக் கொண்டு மாநிலங்களின் கூட்டுக் குடியரசு அமைப்பு ஒன்றின் மூலமே சிறு பான்மை இனங்களின் பிரச்சினைகள் தீர்க்கப்படலாம் என்பதுடன் அத்தீர்வு இலங்கையின் பெரும்பான்மை சமூகத்தினரின் நன்மைக்கும் வித்திடும் என்பதனால் அவர்களின் ஒப்புதலோடே நடைபெறவேண்டும் என வலியுறுத்தி வரும் இவர் இலங்கையின் தென்பகுதி மக்களுடன் இணைந்து தொடர்ந்து பணியாற்றி வருகிறார்.
சமாதானம், மனித உரிமை மீறல்களுக்கு எதிரான செயல்பாடு போன்றவற்றில் தீவிரமாகத் தன்னை ஈடுபடுத்திவரும் சுசீந்திரனின், ஐரோப்பாவில் தொடர்ந்து நடைபெற்று வரும் இலக்கியச் சந்திப்பிற்கான பங்களிப்பு, அளப்பரியது. மேலும் பாரிஸிலிருந்து வெளிவரும் உயிர் நிழல் சஞ்சிகையின் ஆசிரியர் குழுவில் ஒருவர். புலம் பெயர்ந்த இலங்கையரின் சர்வதேச வலைப்பின்னல் என்ற அமைப்பை நிறுவி அதன்மூலம் இலங்கை மக்களின் பொது நலனுக்காக உழைத்துவருபவர்.
இவரது வலைதளம் Lanka Hermes (இலங்கைத் தூதன்) பலரது கவனத்தையும் எதிர்பார்ப்பையும் பெற்றது. இவர் தற்போது தனது மனைவி இன்பா மற்றும் மகன் டினோவுடன் பெர்லினில் வசித்து வருகிறார்.
தற்போது இந்தியா வந்துள்ள அவரை கவிஞர்.தேவேந்திரபூபதியின் மதுரை இல்லத்தில் 21.03.09 அன்று சந்தித்து உரையாடியதிலிருந்து....
ஆதவன் தீட்சண்யா
எழுத்தாக்கம்: ந.பெரியசாமி, சம்பு
I
ஆதவன்: புகலிட இலக்கியம் என்ற வகைமை உருவானதிலும் அதை முன்னெடுத்ததிலும் உங்களுக்கு முன்னணி பங்குண்டு. அது உண்மையில் இலங்கை தமிழ்ச்சமூகத்தின் மனசாட்சியாக வெளிப்படுகிறதா?
சுசீந்திரன்: தமது மொழி, கலாச்சாரம், பிரதேசம் அல்லாத இன்னொரு சூழலில் தமிழ்மக்கள் வாழும் போது அது பல வித்தியாசமான அனுபவங்களையும் சம்பவங்களையும் கொண்டுவந்து சேர்க்கும். இந்த வித்தியாசமான மொழி, கலாச்சார, புவியியல் சூழலில் பெற்றுக்கொள்கிற திசை மாற்றத்தைத் தான் நாங்கள் புகலிட இலக்கியம் என்று சொல்லி ஒரு வசதிக்காக வரைவிலக்கணம் ஒன்றை வைத்துக் கொண்டடோம் என்று சொன்னால், இந்த புகலிட இலக்கியம் ஏன் உருவாகுகிறது? இடப்பெயர்வால். இடப் பெயர்வு ஏன்? அச்சுறுத்தல் பிரச்சனைகளால். ஆகவே இந்த புகலிட இலக்கியத்தின் கடப்பாட்டில் ஒன்று அது எதிர்ப் பிலக்கியப் பண்பைக் கொண்டிருக்கும். ஆனால் தமிழ் மொழிக்குரிய பலவீனமா என்று தெரியல- ஒரு குறிப் பிட்ட காலத்துக்குப் பிறகு அது ஒரு பொருளாதார அடிப் படையைக் கொண்ட இலக்கியப் பகுப்போ என்று நாங்கள் சந்தேகப்படக்கூடிய அளவுக்கு அதன் நுகர்வும் உருவாக்க மும் அமைந்திருக்கிறது. எப்படியென்றால், அந்த காலத் தில் ஒருவர் இங்கிலாந்துக்குப் போய்விட்டு வந்து ஒரு பத்திரிகையில் பயணக்கட்டுரை எழுதினால் அது எல்லோ ராலும் விரும்பி படிக்கப்படும். நாம் போகாத இடத்துக்குப் போய்விட்டு வந்து எழுதியிருக்கிறார் என்கிற அளவில். அதேமாதிரியான ஒரு மேல்நிலையில் இருந்து இந்த அடிநிலை மக்களுக்கு சொல்வது மாதிரியான போக்கும் அது ஏதோ ஒருவகையில் உயர்ந்தது என்ற பார்வையும் அந்த புகலிட இலக்கியத்துக்கு கிடைத்தது.
ஒரு கலாச்சார மோதலை எதிர்கொண்ட தன்மை, அடக்கு முறையை எதிர்கொண்ட விதம், மேற்குலகம் என்றால் வெள்ளை ஆதிக்க சமூகத்திற்கிடையில் தன்னை ஒரு கருப் பனாக உணர்வது, பிற புலம் பெயர்ந்த சமூகங்களோடு தன்னை பிணைத்துக்கொண்ட தன்மை- இவைகளை யெல்லாம் வெளிப்படுத்துவதாக புகலிட இலக்கியம் இருந்ததா என்றால் இல்லை. போராட்டத்தால் ஏற்படும் அனுபவங்கள் அனர்த்தங்கள் ரணங்கள் வலி சீழ் பற்றி பேசுதா என்றால் அதுவுமில்லை. ஏன் அப்படி பேசல என்று காரணங்களைத் தேடிப் போகலாம். ஆனால் உண்மை என்னவென்றால், வெறுமனே மேல்நிலைப்பட்ட விசயங் களைப் பேசுவதாகத்தான் இருக்கு. தொடக்கம் முற்போக்கா இருந்தாலும் பிறகு மழுங்கடிக்கப்பட்டு இன்று வெறுமனே இன்னொரு நாட்டுக்கு இடம் பெயர்ந்த ஒருவர் எதை எழுதினாலும் புகலிட இலக்கியமாக பார்க்கிற தன்மையாக குறுகிவிட்டது. தமிழ் வாசகனின் தேடலும் ரசனையும் எந்தளவில் இருக்கிறதென்று யோசிக்கவேண்டியிருக்கு.
ஆனால் புகலிட இலக்கியம் நிறையவே பண்ணலாம்- இலங்கைப் பிரச்னையை முன்வைத்து பேசிய புகலிட இலக்கியங்கள் மிக சொற்பமாக இருக்கு. நல்ல நாவல்கள் புகலிடத்தில் உருவாகவில்லை. பிறமொழி இலக்கியங் களை உள்வாங்கி கற்றுக்கொண்டு பிறமொழிச் சமூகங்கள் எப்படி தங்களை வெளிப்படுத்திக்கொள்கின்றன என்ற வெளிப்பாட்டு உத்திகளை கைக்கொண்டதா என்றால் இல்லை, அதற்கான காரணம், புகலிட இலக்கியம் என்பதா லேயே அவர்களுக்கு பிரசுர வசதி கிடைக்குது. அதனால் தன் எழுத்தை நிலைநிறுத்துவதற்கானப் போராட்டம் தேவையில்லாமல் இருக்கு. எளிதான அங்கீகாரம் கிடைப்பதால் இந்த மந்தப்போக்கு இருக்கலாம்.
மற்றது, புகலிடத்தில் இலக்கியத்தின்பால் நாட்டம் குறைந்து கொண்டிருப்பதாகத் தான் நினைக்கிறேன். இன்று சினிமாவின் ஆதிக்கமும் நுகர்வும் கூடினதாலும் வெகுஜன ஊடகங்கள் பல்கிப் பெருகினதாலும் இவையெல்லாம் தூரம் விலகி கைநழுவிப் போகிறது.
ஆதவன்: இலங்கைத் தமிழருக்காக தீக்குளிப்பு போன்ற உணர்ச்சிமய மான சுயபலிகளையும், இலக்கியவாதிகளும் சினிமாக் கலைஞர்களும் காட்டும் கூடுதல் ஈடுபாட்டையும் எப்படி பார்க்கிறீர்கள்?
சுசீந்திரன்: இவர்களுக்கு கிடைக்கும் தகவல்கள் ஒருதலை பட்சமானவை. ஆகவே அங்கு இனஅழிப்பு நடக்கிறதாக கருதறாங்க. ஆனால் என் பார்வையில் அங்கு இன அழிப்பு நடைபெறவில்லை. ஏன்னா, அரச கட்டுப்பாட்டில் வாழ் கிற தமிழர்களின் தொகை வன்னிக்குள் அடைபட்டிருக்கிற தமிழர்களை விட கூடுதலானது. அங்கு தமிழர்கள் பாது காப்பாக வாழுகிறார்கள். புலிகளின் பிரதேசங்களில் தடுத்து வைக்கப்பட்டிருக்கிற மக்கள் மீது இலங்கை அரசு தாக்குதல் நடத்துவது உண்மை. ஆனால் அதை இன அழிப்பாக சொல்ல முடியாது. மிகைப்படுத்திச் சொல்லி- மிகைப் படுத்தலையே உண்மை என்று சர்வதேசத்தை நம்பவைக்க லாம் என்ற நப்பாசை எந்த லாபத்தையும் கவன ஈர்ப்பையும் ஏற்படுத்தப்போவதில்லை. மற்றது, மனிதாபிமான உணர் வோடு இருக்கிற கலைஞர்கள் அல்லது இலக்கியவாதிகள், நண்பர்கள் மிகவும் மேலோட்டமான தகவல்களை மட்டும் பெற்றுக்கொண்டு, ஒரு குற்றவுணர்வில் இலங்கை அரசாங் கத்துக்கு எதிராக செயல்படனும்கிற நிலைமைக்குத் தள்ளப் படறாங்க. இலங்கை அரசாங்கத்தின் தாக்குதலை கண்டிக் கிற அதேநேரம் புலிகள் மீதான விமர்சனத்தையும் தமிழர்கள் மீது யார் எந்தவகையில் தாக்குதல் நடத்தினாலும் அதற்கு எதிராக கிளர்ந்து எழணும்கிற உணர்வு இங்கு இருக்குமென்றால் அதை முற்போக்கானதாகத்தான் பார்க்க வேண்டும். புலிகள் அங்கே தமிழர்களை எவ்வாறு நடத்து கிறார்கள்- துப்பாக்கிகளுக்கு இரையாக்கிக் கொண்டிருக் கிறார்கள் என்பதை எடுத்துச் சொல்ல வேண்டிய கடமை என் போன்ற ஆட்களுக்கு இருப்பதாக நம்புகிறேன்.
ஆதவன்: ஒரு பகுதி சமூகம் போர்ச்சூழலுக்குள் இருக்கு. இன்னொரு பகுதி சமூகம் முழுக்க நவீனமயமாகி பாலினச் சமத்துவம் போன்ற அடிப்படை விசயங்களையும் வேறுபல நுண்ணரசியல்களையும் பேசக்கூடிய கலாச்சாரத்திற்குள் நுழைந்து கலந்திருக்கிறது. இந்த ரெண்டு புலங்களிலும் பெண் தனித்து உணரப்படக்கூடியவளாக, அவளது தனித்தன்மையை ஏற்கக்கூடிய மனநிலையை தமிழ்ச்சமூகம் எட்டியிருக்கிறதா? சென்சிடைஸ் ஆகியிருக்கா?
சுசீந்திரன்: இல்லை. பெண்விடுதலை பற்றிய பிரக்ஞை போன்ற விசயங்களில் உலகரீதியான தொடர்பாடல்கள் கூடி மனிதனுக்கு மனிதன் இடையிலான கொடுக்கல் வாங்கல் கள் உறவாடல்களும் கூடின சந்தர்ப்பத்தில் உங்களோட எதிர்பார்ப்பும் என் எதிர்ப்பார்ப்பும் அப்படி இருக்குது. ஆனால் புலம் பெயர்ந்த தமிழ் மக்களுடைய தமிழ்ப் பெண்களுடைய முன்னேற்றம் மிகவும் மட்டுப்படுத்தப்பட்ட தாகத்தான் இருக்கு. ஏனெனில் ஒரு மரபார்ந்த தன்மையில் தொடர்ந்தும் அவர்களுக்கான வசதி வாய்ப்புகள் அப்படி தான் வழங்கப்பட்டிருக்கு. ஒருவயதுக்கு வந்த பெண் ணுக்கு மரபார்ந்த அடிப்படையில்தான் திருமணம் செய்ய வேண்டியிருக்கு. ஒரு புரட்சிகரமான, பெரியார் போன்ற சமூக எழுச்சிமிக்க ஆளுமைகளின் குரல்கள் இன்றைக்கு கேட்பதில்லை. இம்மாதிரியான விசயங்கள் தமிழ்மொழி யிலேயே கிடந்தும் கேட்காதபோது எப்படி பிற மொழி களில் கேட்பாங்க?
ஆதவன்: தமிழ்நாட்டில் நிகழ்ந்த சமூக மாற்றங்கள் பலவும் இலங்கைக்குள்ளும் தாக்கம் செலுத்தும் நிலை இருந்திருக்கிறது. எனில் பெரியாரிய சிந்தனை இலங்கை தமிழ்ச் சமூகத்தால் எவ்வாறு உள்வாங்கப்பட்டிருக்கிறது?
சுசீந்திரன்: எது எப்படியோ, ஈழப்போராட்டத்தின் தொடக் கத்துக்கும் பெரியாரின் வருகை, திராவிடர் கழகம் அல்லது திமுக உருவாக்கம் எல்லாம் சம்பந்தப்பட்டிருக்கு. மொழியை முதன்மைப்படுத்தி திராவிட இனங்களை வேறு படுத்தி தமிழ்நாட்டில் அறிய முற்பட்ட அதே அடிப்படை யில் தான் இலங்கையில் 1956ல் தமிழரசு கட்சி, திமுக பாணி அரசியலை பிரதிபலித்தது. பெரியாரியம் இலங்கைத் தமிழ் மக்களுக்குள் ஊடுருவவில்லை. திராவிட முன்னேற்றக் கழகத்தால் முன்னெடுக்கப்பட்ட பாராளுமன்ற அரசியல் தான் சொல்லப்பட்டதே தவிர சமூக சீர்திருத்த, சுயமரி யாதை அரசியல் காட்டப்படவில்லை. அதாவது அதிகாரத்துக்கான அரசியல் தான் கைக்கொள்ளப்பட்டது.
ஆதவன்: இலங்கை தமிழ்ச்சமூகத்திற்குள் சாதியின் வகிபாகம் குறித்து இரண்டு சர்வதேச மாநாடுகளை நடத்தியுள்ளது இலங்கை தலித் சமூக மேம்பாட்டு முன்னணி. ஆனால் புலிகள் தலையெடுத்தபின், சாதிப் பிரச்னையே கட்டோடு ஒழிந்துவிட்டதாகவும், புலி எதிர்ப்பை பரப்புவதற் காகவே சாதியம் தலைதூக்கிவிட்டதாக சொல்லி தலித்தியம் பேசக் கிளம்பியிருக்கிறார்கள் என்றும் இதற்கு பின்புலத்தில் இலங்கை அரசாங்கம் இருக்கிறது என்றும் குற்றம்சாட்டப்படுகிறதே?
சுசீந்திரன்:இலங்கை தமிழ்ச் சமூகத்தில் ஒடுக்கப்பட்ட சாதி யினருக்காக சண்முகதாசன் போன்ற கம்யூனிஸ்ட்களும் பின்பு சாதியத்திற்கு எதிரான போராட்டமாக பௌத்தத்தை முன்னிருத்தி பிக்குகளும்கூட தமிழ் மக்கள் மத்தியில் செயல்பட்ட வரலாறும் இருக்கிறது. ஆனால், எதிர்ப்புப் போராட்டங்கள் நடந்த காலம் 60-70கள். அந்த காலகட்டத் தில்தான் தேசிய இனப்பிரச்னை கூர்மையடைந்தது. ஏற்க னவே எதிர்கொண்டிருந்த சாதியப் பிரச்னைகளுக்கு தீர்வு காணாமலே, அதை பூடகமாகவும் மறைமுகமாகவும் சமூகத்தில் தொடர்ந்து இயங்க அனுமதித்துக் கொண்டே தேசியத்திற்கான போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. இந்தச் சூழலில் 80களின் தொடக்கத்தில் பெருமளவு புலம் பெயர்வு நடக்குது. புலம் பெயர்ந்த சமூகம் எதுவென்றால் யாழ்ப்பாணத்தை அப்படியே பெயர்த்துக்கொண்டும் யாழ்ப்பாணத்தையே உடுத்திக்கொண்டும் யாழ்ப்பாணத் தையே போர்த்திக்கொண்டும் வந்த சமூகம்தானே? அந்த சமூகம் தன்னகத்தே கொண்டிருந்த சகல அழுக்குகளையும் காவிக்கொண்டுதான் வந்திருக்கு. அதை போராட்டத்தின் பெயரால்- துப்பாக்கிகளின் ஓசையில் அந்த குரல்கள் கேட்காமல் போயிருக்கலாம்- அல்லது துப்பாக்கிப்பிடியின் கீழ் அது மறைந்திருக்கலாம், அதுதான் யதார்த்தமே தவிர சாதி ஒழிக்கப்படல. அதுபற்றி பேசப்படவுமில்ல. அது ஒரு tணீதீஷீஷீ - மறைமுகமானதாக காட்டப்பட்டாலும் அது மிகத் தாராளமாகவே இயங்கிக் கொண்டிருக்குது. ஒரு புற்று நோயைப் போல வளர்ந்து கொண்டிருக்கிறது. மிகப்பெரிய சீர்திருத்தத்தை கண்டுவிட்டோம்- பொருளாதாரரீதியா வளம் பெற்றுவிட்ட புகலிட சமூகத்திற்குள் இதையெல் லாம் நாங்கள் பார்ப்பதில்லை என்று கொண்டாடக்கூடிய நிலையில் இல்லை.
பொருளாதாரப் பிரச்னையைப் பற்றி பேசி னால் அதை தேசதுரோகம் என்று இலங்கை அரசாங்கம் எப்படி சொல்கிறதோ அதேமாதிரிதான் இலங்கை தமிழர்களுக்குள் இருக்கும் அடக்குமுறைகளை நாம் இனங்காண வேண்டும்- அதை நிவர்த்திக்கனும்- சீர்திருத்த வேண்டும் என்ற கோரிக்கை பெரும்பான்மை சமூகத்தால் பார்க்கப்படுது. போராட்டம் பலவீனப்பட்டுவிடுமோ நிராகரிக்கப்பட்டு விடுவோமோ என்ற அச்சத்தின் அடிப்படையிலிருந்தே இந்தப் பார்வை பெரும்பான்மை சமூகத்துக்கு வந்திருக்கி றது. தலித்துகள் பிரச்னை அடிப்படையில் ஒன்றுபடுவதை யும், தலித் என்பதால் என்னென்ன பிரச்னைகளை எதிர் கொள்கிறோம் என்று சொல்வதையும் பெரும்பான்மை சமூகக் கண்ணோட்டத்தின் அடிப்படையில் இருந்து பார்க்க முடியாது. ஒடுக்கப்பட்டவர்கள் அப்படி சொல்கிறார்கள் என்றால் அதுதான் நிஜம்.
ஆதவன்: சிங்களர்களுக்குள்ளேயே ஒரு குறிப்பிட்ட சாதிதான் பௌத்த மத தலைமைக்கு வரமுடியுமாமே?
சுசீந்திரன்: உண்மைதான். சிங்கள மக்களுக்கு மத்தியில் சாதியமைப்பு வலுவானதாக இல்லை. அதை நாம் எற்றுக் கொள்ள வேணும். ஆனால் அவர்கள் மத்தியில் தொடர்ந்து கண்டிச் சிங்களவர், கரையோர சிங்களவர் என்ற ஒருவகை பாகுபாடு ஆரம்பத்தில் இருந்தது. 90களில் பார்க்கலாம். 1890களில் இருந்து கரையோர சிங்களவர்கள் ஒருவகை பின்தங்கியவர்களாகவும் கண்டிச் சிங்களவர்கள் மேன்மை பொருந்திய சாதியினராகவும் கருதப்பட்டனர். அது மெல்ல மெல்ல மாறினாலும் கொகிஹம, பரவ, துரவ என்ற சாதிப் பாகுபாடுகள் இருக்குது. ஆனால் குறிப்பிடக்கூடிய அள வுக்கு பாகுபாடு இல்லையென்றுதான் சொல்ல வேண்டும். இலங்கை தமிழ்ச் சமூகங்களுக்கு மத்தியில் இருக்கிற சாதிப் பிரிப்போடு இதை ஒப்பிட முடியாது. ஆனால் சிங்களர் களுக்குள் இருக்கிற பாகுபாட்டை ஆழமா பார்த்தால் இப்படியரு காரணியை கண்டுபிடிக்கலாம். அதேமாதிரி எந்த பிரதேசங்களில் உள்ளவங்க ஆட்சிப் பொறுப்புக்கு வர்றாங்க என்பதையெல்லாம் பிடிக்க முடியும்.
ஆதவன்- இலங்கை சமூக அமைப்புக்கு, தமிழ் வாழ்க்கைக்கு தொடர்பில்லாத வேறு சமூகங்களுக்கு புலம்பெயர்ந்து அந்த சமூகங்களுக்குள் கலந்து வாழ்வதற்கு உங்களுக்கு முடிந்திருக்கிறது. ஆனால், ஒரே இனம் என்று பேசக்கூடிய தமிழ்நாட்டில் இலங்கைத் தமிழர்கள் அகதிகள் முகாமை விட்டு வெளியேறி கலந்து வாழமுடியாத நிலை இருக்கிறது. அந்த முகாம்கள் வாழத்தகுதியற்றதாக இருக்கிறது. புலம் பெயர்ந்த தமிழர்களிடம் இவர்கள்மீதான அக்கறை உண்டா?
சுசீந்திரன்:இல்லை. துரதிருஷ்டவசமாக. இந்தியாவில் இருக்கும் அகதிகள் முகாம்களில் வாழும் மக்களுடைய வாழ்நிலை எதுவும் புகலிடத் தமிழர்கள் மத்தியில் விவாதிக்கப்படறதில்லை. மேற்கு ஐரோப்பா அல்லது ஐக்கிய அமெரிக்க நாடுகளில் ஆரம்பத்தில் தஞ்சம் புகுந்த வர்களுக்கு ஆகக்கூடி அதிகபட்சம் 5 வருஷம்தான் முகாம் வாழ்க்கை. அதற்குப்பிறகு, மிக இயல்பான ஏனைய பிற சுதேசிகளைப்போல வாழக்கூடிய நிலைமைக்கு வந்துட் டாங்க. ஆனால், மூன்றாம் உலகநாடுகளுக்கு தஞ்சம் போயி ருந்தால் அடுத்து வந்த வாழ்நாள் பூராவும் முகாம்களிலேயே வாழ்கிற மாதிரிதான் இருக்கு. முகாம்களின் வாழ்நிலை வெளியில் இருக்கிற வாழ்நிலைக்கு சமமாகவோ அல்லது உயர்வாக அமைந்துவிடக்கூடாது என்பதில் அங்குள்ள அரசுகள் கவனமாக இருக்கும். அதனால் இந்த மக்களை இலங்கைக்கு வெளியே வாழ்ந்தாலும், புகலிடத் தமிழர்கள் என்ற பிரிப்புக்குள் உள்ளடக்காத தன்மையைத்தான் பார்க்கி றோம். அது புகலிட இலக்கியம் அல்லது அரசியல் அல்லது புகலிட சமூகம் என்றாலும் சரிதான், யாரைக் கருதுகிறார்கள் என்று சொன்னால் இந்த பணங்காய்க்கும் வருவாய் ஈட்டக் கூடியவர்களாக உருவெடுத்த ஐரோப்பிய அல்லது கனடா தமிழர்களைத்தான். ஆகவே இந்தியாவில் இருக்கிற அகதிகள் கடந்த பத்து பதினைந்து வருடங்களாக தொடர்ந்து அகதிகள் முகாம்களில்தான் இருக்கிறார்கள். அவர்கள் மீதான சமூக அடக்குமுறை, பாலியல் ரீதியான அச்சுறுத்தல்- வன்மங்களும் தொடர்ந்து நடந்துகொண்டு தான் இருக்கு. இது அகதியின் பேரால் நடக்கிறதா தமிழின் பேரால் நடக்கிறதா என்று நாம் கேள்வி கேட்க வேண்டும். அவர்களும் தமிழர்கள்- அதுவும் இலங்கைத் தமிழர்கள்.
II
ஆதவன்: இலங்கையின் மக்கள்தொகை விகிதாச்சாரம் என்ன?
சுசீந்திரன்: மொத்த சனத்தொகை 20 மில்லியன்கள். அதில் 24% தமிழ்பேசும் மக்கள். அதாவது பூர்வீகத் தமிழர்கள், மலையகத் தமிழர்கள் மற்றும் முஸ்லீம்கள் எல்லோரையும் சேர்த்து. இலங்கைக்கு வெளியே இந்தியா, கனடா, ஐரோப் பிய நாடுகளில் வாழ்கிறவர்கள் சுமார் ஐந்து தொடக்கம் ஆறுலட்சம். புலிகளின் வன்னிப்பிரதேசப் பரப்புக்குள் கிட்டத்தட்ட ஒன்றரைலட்சம் பேர். மிகுதி மக்களெல்லாம் அரச கட்டுப்பாட்டுப் பகுதிகளான யாழ்ப்பாணம், மன்னார் வவுனியா மாவட்டங்கள் மற்றும் கிழக்கு மாகாணம் முழுவதிலும் வாழ்கிறார்கள்.
ஆதவன்: அப்படியானால், இப்ப ஈழம் என்கிற கனவுப் பிரதேசம் அந்த ஒன்றரைலட்சம் பேருக்கானதாக சுருங்கி இருக்கிறதா?
சுசீந்திரன்: இல்லையில்லை... இந்த ஒன்றரை லட்சம் மக்கள் புலிகளால் கைப்பற்றப்பட்ட பிரதேசத்திற்குள் தற்செயலாக இருப்பதால் அப்படி கருதப் படுகிறார்கள்.
ஆதவன்: தமிழீழம் என்பதன் பரப்பு, எல்லை...?
சுசீந்திரன்: இலங்கைப்படத்தைப் பாருங்கள், மேலே கழுத்து மாதிரி இருக்கும் பகுதி ஆனையிறவு. அதன் கீழே உள்ளது தொடக்கம் வவுனியா வரையான இடைப்பட்ட பகுதிதான் வன்னிப்பிரதேசம். அப்பரப்பு 1998க்குப் பின் புலிகளின் கட்டுப்பாட்டுக்குள் இருந்தது. மக்கள் மீதான அதிகார நிர்வாகத்தைப் புலிகள் நிறுவினார்கள். பொலிஸ் தொடக்கம் அனைத்து அதிகாரக் கட்டமைப்புகள், வரி யிறுப்பு, முழுக் கண்காணிப்புவரை அவர்களிடமிருந்தது. ஆனால், சேவைகள் யாவும் அரசால் வழங்கப்பட்டன. அத்தியாவசிய உணவுப்பொருட்கள், மருந்துப்பொருட்கள், எரிபொருட்கள் எல்லாம் தென்பகுதியில் இருந்து வரும். பாடசாலைகள், வைத்தியசாலைகள், அரசசேவை நிர்வா கம் யாவும் இலங்கையரசின் வேதனத்தில் இயங்கின. இப்படி மக்களுக்கான சகல சேவைகளும் அரசாங்கத்தால் வழங்கப்பட, அதை நிர்வகிப்பதையும், அதனால் பலன் பெறுவதையும் புலிகள் எடுத்துக் கொண்டார்கள். ஆகவே, எல்லாவகை சேவைவளங்களும், எல்லா வகை நிர்வாக அங்கங்களும் புலிகளின் கைகளில் இருந்தன. இதனையே புலிகள் தமிழீழம் என்ற தனி அரசாக, உத்தேசமாக கிழக்கும் சேர்த்து 15000 ச.கி.மீ பரப்பளவுள்ள இந்தப்பகுதியில் இறுமாந்திருந்தனர்.
ஆதவன்: இலங்கை அரசு ராணுவச் செலவுக்காக ஒதுக்கும் தொகை விரைவில் நாட்டையே திவாலாக்கிவிடும் என்று உலக வங்கிகூட எச்சரித்துள்ளது. அங்கு என்னவிதமான உற்பத்தி நடக்குது? என்ன வருமானம்? எப்படி போருக்கு இவ்வளவு செலவழிக்க முடிகிறது?
சுசீந்திரன்: இலங்கையில் நிலவுவது பிறர் உதவியில் தங்கி யிருக்கிற வெளிக்களப் பொருளாதாரம்தான். அதாவது அது உதவி வழங்கும் நாடுகளைத்தான் நம்பி இருக்கிறது. அந்த நாடுகளை திருப்திபடுத்தும் உபாயம் அதற்கு கை வரப் பெற்றிருக்கிறது. உதாரணத்துக்கு, ஜீ.எஸ்.பி.பிளஸ் என்று ஏற்றுமதி வரிச்லுகையோடு சுதந்திர வர்த்தக வளையத்தை வெளிநாட்டு முதலீட்டுக்கு இலங்கை ஏற்படுத்திக் கொடுத் திருக்கிறது. அம்முதலீட்டிலிருந்து பொருட்களை ஏற்றுமதி செய்யவேண்டும் என்றால் சில அடிப்படை நிபந்தனைகள் பூர்த்தியாக்கப்பட்டிருக்கவேண்டும்.அதில்மனித உரிமைகளும் மிக முக்கியமான அம்சம். இந்த உற்பத்தியை இறக்குமதி செய்கிற மேற்குலக நாடுகள் தொடர்ந்து இறக்கு மதி கோட்டாவை நீட்டிக்கவேண்டுமென்றால் நிபந்தனை கள் ஒழுங்காக கடைபிடிக்கப்படுதா என்று நாங்கள் பார்க்க வேண்டும் என்கின்றன. அப்படி பார்த்து கோட்டாவை மறுத்தால் இவ்வளவு மக்கள் பாதிக்கப்படுவார்கள், நிறைய பிரச்சினைகள் இருக்கிறதென இலங்கை அரசாங்கம் இரைஞ்சுகிறது. பிறகு மேற்குலக நாடுகளும் அதை ஒத்துக் கொள்கின்றன. இப்படி உதவி வழங்கும் நாடுகள் என்ன தான் அழுத்தங்களை பிரயோகிப்பதுபோல காட்டிக் கொண் டாலும், அவர்களுடைய நலனும் இந்த விசயத்தில் பொதிந் திருப்பதால் இலங்கை அரசாங்கத்தை காப்பாற்றுகின்ற போக்கே அவர்களிடம் இருக்கிறது.
செப்.11க்கு பிறகு பயங்கரவாதம் என்பதை முன்னிறுத்தி அதை ஒழிப்பதற்கான உதவிகளையும் தார்மீக ஆதரவை யும் பல்வேறு நாடுகளிடமிருந்து இலங்கை பெற்றுக் கொள் கிறது. இது ஒருபக்கம் இருக்க, ஒரு சில முரண்களைக் கொண்டுள்ள எதிரும் புதிருமான நாடுகளிடம் அதாவது இந்தியாவிடமிருந்து உதவிபெறும்போதே, பாகிஸ்தானிட மிருந்தும் சீனாவிடம் இருந்தும் உதவி பெறுகிறது. ராணுவத் தளவாடங்களை அங்கிருந்தும், இங்கிருந்தும் வாங்கிக் கொள்ளும். இந்த வியாபாரத்தின் நிமித்தம் இந்த நாடுகளெல்லாம் போட்டி போட்டுக்கொண்டு இலங்கை அரசுக்கு ஆயுதத்தளவாடங்களையும் அதற்குரிய நிபுணத் துவ உதவிகளையும் வழங்கிக் கொண்டிருக்கின் றன. அதில் சீனா, பாகிஸ்தான், இந்தியா முன்னணியில் நிற்கின்றன. ஈரானுடன் ஒப்பந்தம் ஏற்பட்டுள்ளது. துருக்கி செய்கிறது. இப்படி எங்களுக்கு தெரியாத நாடுகள், தெரிந்த நாடுகளின் தாராளமான உதவிகள் இலங்கையை நோக்கி வருகின்றன. இந்த நாடுகளுடைய உதவியால்தான் போரையும் அரசாங் கத்தையும் நடத்தக்கூடியதாக இலங்கை இருக்கிறது.
மற்றது,ஏற்றுமதி மிகமோசமாக பாதிக்கப்பட்டுவிட்டது. இன்றைய சர்வதேச பொருளாதார நெருக்கடியாலும் நாடு மோசமாக பாதிக்கப்பட்டுள்ளது. அன்னிய முதலீடுகளுக்கு தாராளமான சந்தை வாய்ப்பை இலங்கை அரசு கொடுத் துள்ளது. மூலவளங்கள், மூலப்பொருட்கள் இருக்கும் நிலங் களை வெளிநாட்டுக் கம்பெனிகளுக்கு விற்றிருக்கிறது. இன்றைக்கு சம்பளஉயர்வு, வாழ்க்கைப் பிரச்சனை, விலை உயர்வு, வேலையில்லா நிலை ஆகியவற்றால் எலக்ட்ரிகல் ஒர்க்கர்ஸ், ஹெல்த் ஒர்க்கர்ஸ் தொழிற்சங்கங்கள் நிறைய போராடிக் கொண்டுள்ளன. அரசாங்கமோ, பயங்கரவாதத் திற்கு எதிராக உக்கிரமான போரை நடத்திக்கொண்டிருக்கிற அரசை விமர்சிப்பதும் போராடுவதும் தேசவிரோதச் செயல் என்று முத்திரை குத்துகிறது. நான் அதனால்தான் கருதுகி றேன், போரை அரசாங்கம் விரைவில் முடிவுக்கு கொண்டு வராது என்று. அப்படி கொண்டுவரும் பட்சத்தில் ஏனைய பிரச்சினைகள் தலை தூக்கும். அரசாங்கத்திற்கு எதிராக ஏனைய பிரச்சினைகளுக்காக எழுகிற குரல்களை நசுக்குவ தற்கு இந்த போர் தேவையாயிருக்கு அரசாங்கத்திற்கு. அதனால் தொடர்ந்து நடத்திக்கிட்டு இருக்கு.
ஆதவன்: ஒட்டுமொத்த சிங்களர்களும் இனவெறியர்களா?
சுசீந்திரன்: இல்லை. தமிழீழப் போராட்டத்தை, புலிகளின் கோரிக்கையை முன்னெடுத்துச் செல்கிற சிங்களர்கள் இருக் காங்க. மனிதாபிமான அடிப்படையில் சிறுபான்மை இனங் களின் உரிமைக்கு குரல் கொடுக்கிறவர்கள் இருக்காங்க. அரசாங்கம் சிறுபான்மை இனங்களோடு நடந்து கொள்கிற போக்கை விமர்சிக்கறவங்க இருக்காங்க. மிகச்சிறு குழுக் களாக இருந்தாலும் அவை கணக்கில் எடுக்கப்பட வேண் டும். அவ்வாறின்றி வெறுமனே இனவாதத்தை கக்குகிற ஜேவிபி போன்ற கட்சிகள் சொல்வதை மட்டும் பிரச்சார நோக்கில் பயன்படுத்துவது ஒட்டுமொத்த இலங்கை மக்கள் மீதான வெறுப்பை இங்கு வளர்த்தெடுக்கிறது. இதே வேலையைத்தான் அவன் அங்கு செய்வான். எல்லாத் தமிழனும் தனக்கு எதிரானவன், அவன் இந்தியத் தமிழனாக இருந்தாலும்கூட என்ற நிலையை அங்கு ஏற்படுத்தறாங்க. அது கண்டிக்கப்பட வேண்டியது. இவை யெல்லாம் மக்களிடம் உண்மையான தகவல்கள் சென்றடையாமல் தடுப்பதின் மூலம் சாத்தியமாகிக் கொண்டே இருக்கிறது.
ஆதவன்: விடுதலைப்புலிகள் பெரும் பின்னடைவை சந்தித்து வருவ தாக செய்திகள் வருது. அவர்கள் மீண்டு வரும் சாத்தியமிருக்கிறதா?
சுசீந்திரன்: புலிகளால் இனி மீளமுடியாதென்றுதான் சொல்வேன். இப்பொழுது அவர்களது கைவசம் இருக்கும் பரப்பு வெறும் 28 சதுர கிலோ மீட்டர்கள் மட்டும்தான். அந்த பரப்புக்குள்தான், ஒரு சிறிய குடாப்பரப்பு பொது மக்களின் பாதுகாப்புக்கான மோதல் தவிர்ப்புப் பிரதேசமாக அறிவிக்கப்பட்டுள்ளது. அந்தப் பிரதேசத்திற்குள் பொது மக்களை வரச் சொல்கிறது அரசு. அங்கும் ஏனைய மீதி யுள்ள இடங்களுக்குள்ளும்தான் புலிகள் இருக்கிறார்கள்.
இதுவரை வெவ்வேறு காலகட்டங்களில் இலங்கையரசும் புலிகளும் நடாத்தியப் போர்களில் இலங்கை ராணுவம் தாக்குதல் நடத்தும், அதற்குப் புலிகளின் பதில் தாக்குதல் நடைபெறும். இலங்கையின் இராணுவம் தென்னிலங்கை-கொழும்பு மையப்பட்டது என்பதனால் வடகிழக்கின் சில பிரதேசங்களிலிருந்து இராணுவம் பின்வாங்கும்போது அவை புலிகளின் கைகளுக்கு வந்துசேரும். குறித்த தொகை இராணுவம் மீண்டும் முகாம்களுக்குள் முடக்கப்படும். ஆக, மிகக்குறைந்த இழப்புகளோடு கூடுதல் பிரதேசங்களை புலிகள் தமது கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவந்தமைதான் அண்மைக்கால வரலாறு. ஆனால் இம்முறை அப்படி நடக்கவில்லை. இலங்கை இராணுவம் இம்முறை திரும்பிப் போகவுமில்லை, தவிர ஒரு தளத்தில் மட்டுமே தாக்கவுமில்லை. எட்டுப் படையணிகளை வைத்து பல பக்க முனைகளிலிருந்தும் மற்றும் வான்படை, கடற்படை தாக்குதலை நடாத்தியும், தொடர்ந்து மக்கள் இடம் பெயர்ந்த அந்த வெறுமையான இடங்களை கைப்பற்றிக் கொண்டும் முன்னேறியது. அரசு துருப்புகளின், 5 படை யணி 3 விசேட படையணி இந்த 28ச.கி.மீ சுற்றுவரையில் புலிகளையும் பொதுமக்களையும் அப்படியே சுற்றி வளைத் திருக்கிறது. கடற்படையும் மூன்று வளையங்களாக வியூகம் அமைத்திருக்கின்றது. மேலே சொன்ன பிரதேசத்திலிருந்து புலிகள் கடல் மூலமாகவோ அல்லது தரை மூலமாகவோ வெளியேறாதபடிக்கு ராணுவம் இந்த வியூகத்தை வகுத்திருக்கின்றனது.
அத்தோடு புலிகளின் இராணுவ தந்திரோபாயாங்களை இராணுவம் கனகச்சிதமாகப் பயன்படுத்துகிறது. மன் னாரை அண்மித்த நாச்சிக்குடாவை இராணுவம் தாக்கிய போது புலிகள் மக்களையும் தம்முடன் கொண்டு சென்ற னர். கிளிநொச்சியை இராணுவம் பிடித்தபோது புலிகளின் பேச்சாளர் நடேசன் 'மக்களில்லாத பிரதேசத்தைத் தான் இராணுவம் பிடித்துள்ளது, மக்கள் எங்களோடுதான் இருப்பார்கள்' என்றார். யுத்தம் நடாத்த பொது மக்கள்-சிவிலியன்கள் எவ்வளவு அவசியம் என்பதை இதுபோன்ற கூற்றுக்களில் இருந்து நாம் புரிந்து கொள்ளவேண்டும். இம் முறை மக்கள் இல்லாத பிரதேசத்தை இலகுவாகக் கைப் பற்றிய இராணுவம் அந்த இடங்களில் நிலை கொண்டது. இன்று போராட்டத்தினுடைய தன்மை இது வரையறியாத முற்றிலும் மாற்றமடைந்த நிலையில் இருக்கிறது. இதிலி ருந்து சுதாரித்துக்கொள்வது புலிகளால் முடியாத காரியம்.
ஆதவன்: இப்போது ஏற்பட்டுள்ளது பின்னடைவே அல்ல, இது புலிகளின் உத்தி. பின்வாங்கி மீண்டும் முன்னேறி பழைய நிலையை மீட்டெடுப்பார்கள் என்று சொல்லப்படுகிறது. இது புலிகளின் மீதான பிரமையிலிருந்து சொல்லப்படுவதா? அதற்கான சாத்தியம் உண்டா?
சுசீந்திரன்: பெரிய நிலப்பரப்பை இழந்து, அவர்களது விமானப்படைகள், உற்பத்திச்சாலைகளை கண்டு பிடித்து அழித்தப் பின்னரும், புலிகள் பழைய நிலையை மீட்டெ டுப்பார்கள், மிக பலமான அடியை இலங்கை அரசாங்கம் சந்திக்க இருக்கிறது என்ற பேச்சுக்கள் திட்டமிட்டு பரப்பப் படுகிறது. இப்படி சொல்வது மக்களை மாயைக்குள் நிறுத்திவைக்க இவர்கள் திட்டமிட்டு செய்கிற பிரச்சாரம் தான். வெறும் 1500 கேடர்களை மட்டுமே-அதுவும் எப்படா தப்பி வெளியேற முடியும் என்ற மனநிலையில் இருக்கிற இளைஞர்களை - வைத்துக்கொண்டு வெளியே பரந்திருக்கிற புலிகள் மீதான அனுதாபத்தை தொடர்ந்து தக்கவைத்துக் கொள்ளவும் அதன் பலாபலன்களை அனு பவிக்கவும் திட்டமிட்டே இப்படியான மாயைக்குள் வைத் துள்ளனர்.இலங்கைப்பிரச்சினையை தொடர்ந்து கவனித்து வரும் ஒரு சாதாரண மனிதனுக்கு, அங்கே எவ்வளவு மக்கள் அடைபட்டிருக்கிறார்கள், எவ்வளவு புலிகள் போராடிக் கொண்டிருக்கிறார்கள், அவர்களின் பரப்பளவு எவ்வளவு, மக்கள் ஆதரவு எப்படியிருக்கு என்ற விசயங்கள் மிகத்துல் லியமாகத் தெரியும். புகலிடத்தில் 5லட்சம் தமிழர்கள் இடம் பெயர்ந்து வாழ்கிறார்கள். பெரும்தொகையாக கனடாவி லும், ஏனையர் மேற்கு ஐரோப்பாவிலும் ஆஸ்திரேலியா போன்ற நாடுகளிலும் இருக்கினம். மேற்கு ஐரோப்பிய நாடு களில் பத்தாயிரம் தொடக்கம் மக்களை ஒரு களத்துக்கு கொண்டு வரக்கூடியதாக இருக்கிறது. ஐம்பதாயிரம் பேர் வீதி இறங்கும் நிலை டெராண்டாவில் இருக்கினம். ஆகவே இந்த தமிழர்களை உணர்ச்சிவயப்பட்ட நிலையில் தக்க வைத்திருப்பதன் மூலமே இவைகள் சாத்தியமாகும். இவர் களின் கோரிக்கைகள் யாவும் வெறும் உட்டோப்பியன் கோரிக்கையாகத்தான் இருக்கு. 'வீ வாண்ட் தமிழீழம் அவர் லீடர் பிரபாகரன்' என்ற கோஷத்தைத் தவிர அப்பால் செல்லமுடியாத அரசியல் வங்குரோத்து நிலையில்தான் மக்கள் இருக்காங்க. அது மிகவும் பச்சாதாப உணர்வைத் தான் வெளிப்படுத்துதே தவிர வலுவான அரசியல் சக்தியாக உருவெடுக்கக்கூடிய, அவர்களை வழிநடத்தக்கூடிய தலைமையாக புலிகள் இல்லை.
ஆதவன்: புலிகள் கட்டுப்பாட்டுப் பகுதியில் மக்களின் நிலை?
சுசீந்திரன்: நான் அங்கிருந்து இடம்பெயர்ந்து வந்த பலரிடம் நேரடியாவே பேசியிருக்கிறேன். இராணுவம் வந்து எங்களை எப்பொழுது காப்பாற்றும் என்ற மனோ நிலையில்தான் மக்கள் இருக்கின்றனர். உயிரோடு எப்படித் தப்பிச் செல்வது என்று எண்ணியபடிதான் அங்கு ஒவ் வொரு மனிதனும் தவிச்சிக்கிட்டு இருக்கிறான். இளம் பிராயத்தினர் அங்கிருந்து தப்ப முயற்சிக்கும்போது தயவு, தாட்சண்யம், மனிதாமாபிமானம், இரக்கம் எதுவுமின்றி அவர்களின் காலையோ கையையோ முறித்து ஊனப்படுத் தியேனும் தப்பமுடியாத படிக்குத் தடுத்துவைக்கிற நிலை யில்தான் இன்று புலிகள் மனிதம்கெட்டு இருக்கின்றனர். அங்கே திறந்தவெளியில் சிறைப்பட்டிருக்கக்கூடிய பொது மக்கள் மீது கருணை எதுவும் அவங்களிடம் இருப்பதாகத் தெரியவில்லை.
இன்னொன்று கேள்விப்பட்டேன். ஒரு பிரதேசத்திலிருந்து புலிகள் அடுத்த பிரதேசத்துக்கு பின்வாங்கும்போது 'இது வரை இடம்பெயர்ந்தது போதும்; நாங்கள் உங்களுடன் தொடர்ந்து வரவில்லை; பதுங்கு குழிக்குள்ளேயே நாங்கள் இருந்துவிடுகிறோம்' என்று புலிகளுடன் சேர்ந்துபோக மக்கள் மறுப்பார்களாம். பதுங்கு குழிகளுக்குள் மக்கள் இருப்பதற்குக் காரணமே தப்பிச்சு ஓடுவதற்குதான் என்று புலிகள் அறிவார்கள். 'உங்கள் பதுங்குகுழிகளைச் சுற்றி நிலக்கண்ணிவெடி புதைத்து வைத்திருக்கின்றோம், இயலு மென்றால் தப்பித்துப் பாருங்கள்' என்று புலிகள் சொல்லி விடுவதுடன் அப்படியே செய்தும் விடுகின்றனர். இப்படி அகப்பட்டுத் தவிக்கின்ற சுமார் ஒன்றரை லட்சம் மக்களை மீட்டு எடுப்பதற்கான வழிவகைதான் இன்று எங்களுக்கு விடப்பட்டிருக்கிற மிகப்பெரிய சவால். புலிகளால் அணி திரட்டப்பட்ட நிறையப் பிள்ளைகள் உடனடியாக, மிகக் குறுகியகாலப் பயிற்சியே வழங்கப்பட்டிருப்பதால் துப்பாக்கிக்கு இரையாகிற போக்குதான் அங்கு இருக்கிறது என்றறிகிறேன். ஒரு பெரிய சமூகமே மனதளவிலும் உடலளவிலும் ஊனமுற்ற சமூகமாக மாறிவிட்ட இந்த அவலத்தை எப்படி சகித்துக் கொள்வது?
ஆதவன்: ஆமி காப்பாத்தும்னு சனங்க எதிர்பார்ப்பதாக சொல்றீங் களே, ஆமி மேல இந்த நம்பிக்கை எந்த அடிப்படையில் வருது?
சுசீந்திரன்: உயிர் வாழத்தானே மக்கள் விரும்புவார்கள்? புலிகளின் கட்டுப்பாட்டை மீறி, வன்னிப்பிரதேசத்தை விட்டு வெளியேறும் வாய்ப்பு அவர்களுக்குக் கிடைக்க வில்லை. வாய்ப்பு இருந்திருந்தால் நிச்சயமாக வெளியேறி யிருப்பார்கள். புலிகள் பொதுமக்களை, பிள்ளைகளை சாகக் கொடுக்கப் போகிறார்கள், பலியாக்கப் போகிறார்கள், இதிலிருந்து நாம் தப்பிவிடவேண்டும் என்று மக்களுக்குத் தெரிகிறது. அடிப்படைத் தேவைகளான உணவு, மருந்து களை வன்னிப்பிரதேசத்திற்கு வழங்காமல் தொடர்ந்து இலங்கை அரசாங்கம் தடை செய்துள்ளது. ஆக இப்படி அவர்கள் எல்லாவகை நெருக்குவாரங்களையும் நிர்ப்பந்தங் களையும் கடந்த ஐந்து, பத்து வருடங்களாகச் சுமக்கிறவர் கள்தான். மேலும் மொத்த வன்னி நிலப்பரப்பிலிருந்து பலமுறை உட்பிரதேசங்களுக்குள் ளேயே இடம்பெயர்ந்த வர்கள். அதைவிட 2007 பிப்ரவரியில் தொடங்கிய சண்டை யில் அவர்கள் ஒரு பிரதேசத்திலிருந்து இன்னொரு பிரதேசத் திற்கு கொண்டு வரப்பட்டிருப்பார்கள். பலருக்கு கடந்த பத்து வருசமா இடப்பெயர்விலேயே வாழ்க்கை ஓடிக் கொண்டிருக்கிறது. மரங்களுக்கு கீழ் வாழ நிர்ப்பந்திக்கப் பட்டுள்ளார்கள். இதுவரைக்கும் புலிகள் தங்களை காப்பாத்தினார்கள் என்பதைவிட ஆட்டு மந்தைகள் மாதிரி மேய்த்து கொண்டு வந்திருக்கிறார்கள் என்பது அவர்களுக் குத்தான் தெரியும். அதனால்தான் பதுங்குகுழிக்குள் இருந்து விட்டால் இராணுவம் இந்தப் பிரதேசத்தை கைப்பற்றும், பின் எங்களைக் காப்பாற்றும் என்று நம்புகிறார்கள்.
ஆதவன்: சரி ஆமிக்கு உண்மையிலேயே அந்த மாதிரியான நல்ல நோக்கங்களெல்லாம் உண்டா?
சுசீந்திரன்: இல்லை. இலங்கை அரசுக்கோ, இராணுவத் துக்கோ அப்படியான நோக்கம் கிடையாது. இலங்கையில் சாவது தமிழ்ப் பொதுமகனாக இருந்தாலும் சரி புலியாக இருந்தாலும் சரி இராணுவத்திற்கு எந்த அக்கறையும் இல்ல. கைப்பற்றப்பட்ட பகுதியிலிருந்து கண்டுபிடிக்கப்பட்ட மக்களைக் கொண்டுபோய் முகாம் களில் அடைத்து வைத்து அவர்கள் மீதான விசாரணை தொடர்கிறது. சாவது மக்கள் என்பது பற்றி அக்கறை இல்லை என்பதை தொடர்ச்சியான தன் நடவடிக்கை மூலம் நிரூபித்துக்கொண்டே இருக்கிறது இலங்கைச் சிங்கள இராணுவம். எவ்வாறுதான் அரசுத்தரப் பிலிருந்து பிரச்சாரங்கள் முடுக்கிவிடப்பட்டிருந்தாலும் இலங்கை இராணுவம் மக்களின் நலனின் அடிப்படையில் செயல்படுகின்றது என்பதை நிரூபிக்க இலங்கை அரசால் முடியவில்லை.
ஆதவன்: உயிர்வாழ்வதற்கான ஏதோ குறைந்தபட்ச உத்திரவாதம் இருக்கு என்ற நம்பிக்கையில் முகாம்களுக்குப் போறாங்களா?
சுசீந்திரன்: ஆமாம்.
ஆதவன்: ராணுவமும் புலிகளும் தத்தமது நிலைகளை நியாயப் படுத்திக் கொள்ளும் அடிப்படைதான் என்னவாக இருக்கிறது?
சுசீந்திரன்: அரசில் அங்கம் வகிக்கிற மக்கள் விடுதலை முன்னணி என்ற ஜே.வி.பி கட்சியைச் சேர்ந்த அமைச்சர் சம்பிக ரணவக்க 'தமிழ் மக்கள், முஸ்லீம் மக்கள் மற்றும் ஏனைய இனங்கள் யாவும் வந்தேறு குடிகள்; இந்த நாட்டுக் குரியவர்கள் அல்ல. இது பவுத்த சிங்கள நாடு. இவர்களுக் காக குரல் கொடுக்கிற அரசியல்வாதிகள் யாவரும் தேசத் துரோகிகள்' என்று விளக்கம் கொடுக்கிறார். இதனையே மகாவம்ச மனோநிலை என்கிறேன். இந்த மனோநிலையில் இருந்துதான் இராணுவத்திற்கு சிங்கள இளைஞர்கள் திரட்டப்படுகின்றனர். எப்படி இராணுவம் புலியை ஊக்கு வித்ததோ அவ்வாறே புலியும். இனங்களுக்கிடையிலான உறவுகள் துருவங்களாக்கப்பட்டு இலங்கையின் தென்பகுதி யில் இன்று குரூரமாக வளர்ச்சியுற்றிருக்கிற இனவாதப் போக்குக்கு புலிகளும் காரணம் என்பது மிகையல்ல. தென் பகுதியில் வளர்ந்துவரும் இனவாதம் தம் நோக்கத்துக்குச் சாதகமானதே என்று புலிகள் கருதுகின்றனர் போலும். அவர்களுடைய நடவடிக்கைகளைப் பார்த்தால், தென் பகுதியில் எப்பவும் ஒரு குழப்பகரமான ஸ்திரமற்ற நிலை மையும் தமிழ் மக்கள் மீதான அச்சுறுத்தலும் அடக்குமுறை யும் தொடர்ந்து இருக்க வேண்டுமென்று கருதுகிறார்களோ என்ற சந்தேகம் ஏற்படுவது இயல்பானது.
இலங்கை அரசாங்கத்தின் நடைமுறைகள்- போரைக் காரணம் காட்டி அரசத் துருப்புகள் ஏற்படுத்தும் திடீர் நடை முறைகள்- புலிகள் தம்மை மக்கள் முன் நியாயப்படுத்திக் கொள்வதற்கு ஏற்ற மாதிரியாகவே இருக்கும். கொழும்பில் குடிகொண்டிருந்த ஐநூறு தமிழ் இளைஞர்களை அரசாங்கம் பலவந்தமாகப் பிடித்து பஸ்ஸில் ஏற்றி அவர்களை வவுனியாவில் இறக்கிவிட்டது. கொழும்பில் வாழ்ந்து கொண்டிருந்த அந்த இளைஞர்களை வவுனியாவில் கொண்டுவந்து விடுதல் என்பது, கொழும்பு உன் பிரதேசம் அல்ல என்று சொல்வதாக இருக்கலாம். அல்லது நீ வன்னிக்குப் போக வேண்டிய ஆள், போராட வேண்டிய ஆள், போராடியே என்னிடத்தில் சாகவேண்டிய ஆள் என்றும்கூட சொல்வதாக நாம் எடுத்துக் கொள்ளலாம்.
ஆதவன்: மக்களின் வாழ்நிலை நொய்மைப் படுத்தப்பட்ட துயரத்தை இந்தப் போர்ச்சூழல் வழங்கியிருக்கிறது அல்லவா?
சுசீந்திரன்: அரச படைகளும் புலிகளும் தத்தம் பங்குக்கு ஆட்லறி குண்டுவீசிக் கொண்டிருக்கின்றனர். இவர்களுக் கிடையில் அகப்படுவதென்னவோ பொதுமக்கள். இராணுவத்தால், வான்நிலைத் தாக்குதலால் மட்டுமல்ல புலிகளால் வீசப்படற குண்டுகளாலும் மக்கள் காயமடைகி றார்கள். காயமுற்றவர்களை நடமாடும் வைத்திய சாலைக்குக் கொண்டு சென்றாலும் அந்த வைத்தியசாலை களில் எதுவும் இல்ல. நிறைய மரணங்கள் இரத்தப் போக் கால்தான் சம்பவிக்கின்றன. அங்கு அவசர சிகிச்சை என்பது காயத்தைச் சுற்றி கட்டுப் போடுவதுதான். திருகோணமலை துறைமுகத்திலிருந்து வடக்கு நோக்கி கப்பல் மூலம் மிகச் சிறிதளவிலான உணவுப்பொருட்கள், மருந்துகளை இடை யிடையே கொண்டு வந்து கொடுக்கின்றனர்; அதுவும்கூட மிகவும் மட்டுப்படுத்தப்பட்ட அளவில்தான். அப்படி வரு கிற கப்பலில் இந்தக் காயப்பட்ட மக்கள் 400 தொடக்கம் 500 பேர் ஒரேதடவை சிகிச்சைக்காக திருகோணமலை மருத்து வமனைக்கு கொண்டு வரப்படுகின்றனர். சிகிச்சை வழங் கிய பின்னர் வெல்ஃபெர் சென்டர்ஸ் என்ற பெயரில் அரசாங்கம் ஏற்படுத்தி வைத்திருக்கும் பல்வேறு முகாம் களுக்கு பிரித்து அனுப்பப்பட்டுவிடுகின்றனர். இந்த முகாம்களுக்குள் கொண்டு போய் இந்த மக்களை அடைத்து வைத்திருக்கின்றது அரசு.
ஆதவன்: முகாம்களில் அடைக்கப்படுகிற மக்களை அரசு என்ன விதமாக அணுகுகிறது?
சுசீந்திரன்: அரசாங்கக் கூற்றின்படி, முகாம்களின் முழு நிர் வாகமும் இராணுவத்தின் கையில்தான் இருக்கிறது. அடுத்த நான்கு வருஷங்களுக்கு இந்த மக்களை முகாம்களுக்குள் வைத்திருப்பதே அரசின் நோக்கம். காயப்பட்டவர்கள்- பொதுமக்கள் என்ற போர்வையில் புலிகள் ஊடுருவியிருக் கிறார்கள் என்று அந்த மக்களை தொடர்ந்து கண்காணிப்புக் கும், விசாரணைக்கும் உரியவர்களாகத்தான் வைத்திருக்கி றது. இப்பொழுது சர்வதேச சமூகமும், உதவும் நிறுவனங்க ளும் இந்த முகாம்களின் கண்காணிப்பையும் பராமரிப்பை யும் தமது கைகளில் தரும்படி கோருகின்றன. முகாம்களுக் குள்ளும் ஆட்கடத்தல், காணாமல் போதல், தற்கொலை மாதிரியான விடயங்களும் சமயங்களில் நடக்கின்றன. இவை சிலநேரங்களில் மிகைப்படுத்தப்பட்டு பயங்கரச் செய்திகளாகி வெளிநாடுகளுக்கு வந்து கொண்டுள்ளன.
ஆதவன்: ஈழத்துக்கான போராட்டம் வன்னிப்பரப்புக்குள் மையம் கொண்டது எவ்வாறு?
சுசீந்திரன்: வன்னிப்பிரதேசமென்பது காடுகள் கொண்ட, விவசாயத்தையே நம்பி வாழுகிற மக்கள் மற்றும் வடக்கின் வளமற்ற பிரதேச மக்கள் விவசாய நிலங்களைப் பெற்றுக் குடியேறிய பின்தங்கிய பிரதேசம். தனிநாட்டுக் கோரிக்கை, தமிழீழக் கோரிக்கை, அதற்கான அரசியல் போராட்டங்கள் எல்லாம் யாழ்ப்பாணத்திலும், அதைச் சூழவுள்ள வடக்குப் பகுதிகளிலும் உருவாயின. 1997-98ஆம் ஆண்டு யாழ்ப் பாணத்தில் இடம்பெற்ற சண்டையில், யாழ்ப்பாண மாவட் டத்தில் அரசாங்கத்தின் நிர்வாகம் ஏற்படுத்தப்பட்டது. பின்னர், உயர் பாதுகாப்பு வலையங்கள் என்று பிரகடனப் படுத்தப்பட்டு அந்த இடங்களில் இராணுவம் நிலை கொண்டிருந்தது-இப்போதும் இருக்கிறது. யாழ்ப்பாணத் தின் மீது கட்டுப்பாட்டை இழந்த புலிகளும் அவர்களது பணிப்பிலும் சுயவிருப்பத்தின் பேரிலும் மக்களும் வன்னிப் பிரதேசம் நோக்கி இடம்பெயர்ந்தனர். இந்த வன்னிப் பிர தேசத்தை தங்களுடைய நிரந்தர நிலைகொள்ளும் பிரதேச மாக புலிகள் அதன்பின்னரே ஆக்கிக் கொண்டனர். 2002ம் ஆண்டு பெப்ரவரி மாசம் 21ந் தேதி அன்றைய ஐக்கிய தேசியக் கட்சி அரசாங்கத்துக்கும் புலிகளுக்குமிடையில் சமாதான ஒப்பந்தம் ஒன்று கைச்சாத்தானது. இதனை யடுத்து யாழ்ப்பாணத்தின் வடபகுதியிலிருந்து வன்னிக்கு இடம்பெயர்ந்திருந்த அனேகம்பேர் தமதிடங்களுக்குத் திரும்பிச் சென்றுவிட்டனர். வன்னியில் எஞ்சியோர் பாவப் பட்ட வன்னி மக்கள்தான்.
ஆதவன்: புலிகள் ஒரு அரசாங்கம் போல் செயல்பட்ட அந்த காலத்தை விளக்க முடியுமா?
சுசீந்திரன்: 2002ல் சமாதான ஒப்பந்தம் ஏற்பட்ட போது பேச்சுவார்த்தையில் ஈடுபடும் சமதிறத்தவர்கள் என்ற அடிப் படையில் ஒரு அரசுக்கான அங்கீகாரம், சம அந்தஸ்து புலி களுக்கு வழங்கப்பட்டிருந்தது. இந்த அங்கீகாரத்திலிருந்த சாதகமான விஷயங்களை புலிகள் நல்லவகையில் பயன் படுத்தவில்லை.மிகப்பெருமளவில் போருக்கு, படையணி களில் ஆட்களைத் திரட்டுவது முடுக்கிவிடப்பட்டிருந்தது. பாடசாலைகள் யாவும் புலிகளின் கைகளில் இருந்தன. புலிகள் அங்கு வந்து, நாங்க மீட்டிங் நடத்தப் போகிறோம் பிள்ளைகளையெல்லாம் கூப்பிடுங்கள் என்று கட்டளை யிடுவார்கள். ஆசிரியர்கள் புலிகளின் ஏவலாளர்களாயினர். ஒருவர் அரசு அதிகாரியாக அரசிடமிருந்து சம்பளம் பெறு வார். ஆனால் அவர் புலிகளுக்காகவே பணி செய்ய வேண்டிய நிர்ப்பந்தத்தில் இருந்தார். இது கட்டாயத்தின் பேரில் செய்யப்பட்டது. மக்கள்மீது குற்றம் காண முடி யாது. இப்படி அங்கிங்கெனாதபடி நிர்வாகத்தின் முழுப் பலனையும் அனுபவித்துக் கொண்டிருந்தனர் புலிகள். ஆகவே ஒரு திறந்தவெளிச் சிறைச்சாலைக்குள் இந்த மக்கள் அடைக்கப்பட்டிருந்த சமாச்சாரம் அதிகம் வெளியில் தெரியவரவில்லை. சிங்கள அரச அடக்குமுறை, இரண் டாம்தரப் பிரஜைகளாகத் தமிழர்களை அரசு நடத்திய முறைமை என்பவற்றால் மக்கள் புலிகளின் அடக்குமுறை யினை மௌனமாகச் சகித்துக்கொண்டார்கள் என்று கொள் ளலாம். ஒரு கண்காணிப்பு அரசியலுக்கு உட்பட்டு வாழ்ந்த பழக்கமோ என்னவோ இதை யாரும் பேசுவதில்லை.
ஆதவன்- வன்னிக்கு வெளியே வாழும் தமிழர்களுக்கும் வன்னிப் பகுதிக்கும் இடையேயான தொடர்பின் உயிர்த்தன்மை எத்தகையது?
சுசீந்திரன்: போராட்டம் தொடங்கிய 80களிலிருந்து பெரும் தொகையான மக்கள் வெளிநாடுகளுக்கு இடம் பெயர்ந்தனர். வடக்கில் பின்தங்கிய மாவட்டங்களான கிளி நொச்சி, முல்லைத்தீவு, வன்னி, மன்னார், மற்றும் கிழக் கில் மட்டக்களப்பு, திருகோணமலை பிரதேசங்களோடு ஒப்பிட்டுப் பார்க்கையில் யாழ்ப்பாணம்- வட மாகாணப் பகுதியினர்தான் அதிகளவில் இடம் பெயர்ந்தனர். வன்னி என்று இழிவாகப் பேசப்பட்ட வன்னி மக்களோடு இந்தப் புலம் பெயர்ந்த மக்களின் பிணைப்பு அதிகமில்லை. இவர் களுக்கு வன்னி நிலப்பரப்பு அறியப்படாத பிரதேசமாகத் தான் இருக்கிறது. இந்த வன்னி நிலப்பரப்புக்கூடாகத்தான் ஏ.9 என்ற நெடுஞ்சாலை ஊடறுக்கிறது. இது கொழும்பை யும், யாழ்ப்பாணத்தையும் இணைக்கின்ற தரைவழிப் பாதை. இன்னுமொன்று, ஒருகாலத்தில் இருந்து இன்று அறுந்துபோன காங்கேசன்துறை தொடக்கம் கொழும்பு வரைக்குமான ரயில்பாதை. சிலருக்கு ரயில் பிரயாணத்தின் போது சன்னல் கண்ணாடி வழியாகப் பார்த்ததுதான் வன்னி. யாழ்ப்பாணத்திலிருந்து கொழும்பு நோக்கிய பஸ் பிரயா ணத்தின் போது வழிபாட்டுக்காக இறங்குமிடம் கிளி நொச்சிக்கு அடுத்து இருக்கிற முறிகண்டி. எல்லா வாகனங் களும் அவ்விடத்தில் நிறுத்தப்படும். நிறுத்தி அங்குள்ள பிள்ளையார் கோவிலுக்கு தேங்காய் உடைத்து கும்பிட்டுச் செல்வார்கள். அப்படிதான் பெரும்பாலான வெளிநாடு வாழ் மக்கள் இந்த வன்னிப்பகுதியை அறிந்துவைத்திருந்த னர். வன்னி மக்களுடனான தொடர்பாடல், உறவு, பிரதேசப் புவியியல் அறிவு இவர்களுக்கு பெரிய அளவில் இல்லை என்றுதான் சொல்வேன். அதாவது இம்மக்களின் மீதான கவனம் குறைந்து புலிகளின் இருப்பு பற்றிய கேள்வி தான் இன்று இவர்களிடத்தில் முன்னிலை வகிக்கிறது.
ஆதவன்: புலிகள் இயக்கத்திற்குள் இளைஞர்கள் மனமுவந்து பங்கேற்கிறார்களா?
சுசீந்திரன்: சாமானிய மக்களுக்கு கட்டாயப் பயிற்சி வழங் கல், மக்கள் படை உருவாக்குதல் இவையெல்லாம் முடுக்கி விடப்பட்டு 2007வரை தொடர்ச்சியாகச் செய்யப்பட்டது. இதை இணையம் வாயிலாக வெளிநாடுகளில் வீரப் பிரச் சாரம் செய்தார்கள். வீட்டுக்கு ஒரு நபர் என்ற அளவில் எல்லோருமே வீட்டுக்கொரு போராளியைக் கொடுக்க வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டனர். அப்படித் தள்ளப் பட்டதாலேயே கொல்லப்பட்ட இளைஞர்களின் குடும்பங் கள் மாவீரர் குடும்பங்களாக்கப்பட்டன. மாவீரர்களுக்கான சிலைகள், மாவீரர்கள் துயிலும் இல்லம் மற்றும் மாவீரர் வழிபாடு போன்றவற்றின் மூலம் மேலும் மேலும் மக்களை போருக்கு வென்றெடுப்பதற்கான உத்தி வகுக்கப்பட்டது. ஆண்குழந்தையையோ, பெண் குழந்தையையோ விடு தலை இயக்கத்திற்காக இழந்த குடும்பங்கள் ஏதோவொரு வகையில் புலிகளோடு இணைக்கப்பட்டிருக்கிறார்கள். சில வேளைகளில் புலிகள் நிர்வாகத்தில் முன்னுரிமை பெற்றுக் கொண்ட குடும்பங்களாக்கப்பட்டனர். இக்குடும்பத்தினர் யுத்தப் பிரதேசத்தில் இருந்து தப்பி அரசு கட்டுப்பாட்டுப் பகுதிக்கு வந்தால் பாதிக்கப்படலாம், கேள்விக்கு உள்ளாக்கப்படலாம், காட்டிக் கொடுக்கப்படலாம் போன்ற பயத்தின் காரணமாக தப்பிச்செல்வதைத் தவிர்த்து இறந்து கொண்டிருக்கின்றனர்.
ஆதவன்: தப்பி உயிர் வாழும் பொருட்டு மக்கள் பதுங்குக்குழிக்குள் அடைந்துகொள்வதாக செய்திகள் வருகின்றன. அறியாமையில் கேட்க சங்கடமாய்த்தான் இருக்கிறது, பதுங்குக்குழி எப்படி இருக்கும்?
சுசீந்திரன்: பதுங்குகுழி என்றால், படிகள் வெட்டப்பட்டி ருக்கும். கீழே இறங்கியதற்கப்புறம் கீழுக்கு அதைக் கொஞ்சம் விசாலமாக்குவார்கள். மேலே தரையிருக்கும். அதை மரங்களால் மூடி ஓலைகள் அல்லது இலைகளால் மறைச்சிருப்பாங்க. அங்கு வீசப்படும் குண்டுகளின் ஓசை யிலிருந்தும் திசையிலிருந்தும் இது இராணுவத்திடமிருந்து வருகிறதா புலிகளிடமிருந்து வருகிறதா என்று மக்களால் வேறு பிரித்தறிய முடிகின்றது. புலிகளிடமிருந்து வந்தால் ஒருவகை இரைச்சலோடு கூவிக்கொண்டு வருமாம். ஆமியிடமிருந்து வருவது வேறுவகை இரைச்சல். புலிகள் ஏன் இந்த குண்டை வீசுகின்றனர்? இது ஆமி மீது வீசப் பட்ட குண்டா என்றால் அப்படியுமில்லை. இராணுவம் முன்னேறி வரும்போது புலிகள் பின்வாங்குவார்கள். பின்வாங்கும்போது மக்கள் தொடர்ந்து பதுங்கு குழிக்குள் இருந்தாலும் புலிகளின் கண்காணிப்பில்தான் இருக்கி றார்கள். இவர்கள் தற்செயலாக மேலே எழுந்து வந்து எங்கே யாவது நகர்ந்தால், அசைந்தால் அங்கிருந்து வெளியேற முடியாதபடிக்கு அடிக்கிறார்கள் புலிகள்.
பதுங்கு குழியில் வாழும்போது குழந்தைகள் எப்படியாவது பதுங்கு குழியைவிட்டு வெளியே வருவதற்கான உபாயம் பண்ணுவார்கள். அழுவார்கள், அடம்பிடிப்பார்கள். தாகம் என்பார்கள், பசிக்குதென்பார்கள். என் மைத்துனரின் இரண்டுவயசுப் பையன், தண்ணீர் வேண்டும் என்றான். பிள்ளை தாகத்தில் அழுதபோது அவர் தண்ணீர் எடுக்க வெளியே வந்தார். சொம்பில் தண்ணீர் எடுத்து வந்தபோது, சொம்பில் வேண்டாம், தம்ளர் வேண்டும் என்றான். அவர் தம்ளர் எடுக்க வெளியில் வந்தபோது புலிகளால் வீசப்பட்ட ஷெல் அவருடைய வலது கையில் பட்டு கையில் முறிவு ஏற்பட்டது. ஷெல் படும்போது எறும்பு கடித்ததுபோல் இருந்ததாம். பின்னாடி பார்த்தால் கை எலும்பு தெரிந்ததாம். அவர் சொல்வதை வைத்துப் பார்த்தால் அது கிளஸ்டர் பாமாக இருக்கலாம் என்பது என் ஊகம். சிதைந்த எலும் பின் கூறுகளை காயத்துக்குள்ளிருந்து கண்டுபிடித்தார்கள். அவர் இன்னமும் சிகிச்சை பெற்றுவருகின்றார். ‘கையினை நான் இழந்தமையினாலேயே (காயமடைந்தமையால்) அங்கிருந்து வெளியேற முடிந்தது. உங்களை உயிருடன் பார்க்க முடிகிறது’ என்கிறார் அவர். இப்படி அந்த பதுங்கு குழிக்குள் வாழறது என்பது இலகுவான காரியமில்லை. அதனைக் கற்பனை செய்துகொள்வதே கடினம்.
ஆதவன்: சமாதான காலத்தில் உண்மையில் சமாதானம் இருந்ததா?
சுசீந்திரன்: 2002ம் ஆண்டு தொடக்கம் 2006ம் ஆண்டுவரை சமாதான ஒப்பந்தம் அமுலில் இருந்தது. சமாதான ஒப்பந்தம் நிலவிய அந்த வருடங்களில் அரசாங்கத்துடன் இடையிடையே முறுகல் நிலை தோன்றியது. ஆனால் மோதல் இருக்கவில்லை. அந்த காலக்கட்டத்தில் புலிகள் பல்வேறு நாடுகளுக்கும் ஆறு சுற்று பேச்சுவார்த்தைக்குச் சென்றனர். சர்வதேச அங்கீகாரம் கிடைத்தது. பேச்சுவார்த் தையில் தங்களின் தரப்பை பலப்படுத்துவதற்கும் தங்களின் நியாயமான கோரிக்கைகளுக்கு சர்வதேச ஆதரவு பெறுவ தற்கும் சந்தர்ப்பங்கள் அமைந்திருந்தன. இலங்கையில் எப்படி ஒரு அரசியல் தீர்வு சாத்தியமாகலாம் என்பதனைச் சிந்திக்கக்கூடிய காலகட்டமாகவும்கூட இச்சந்தர்ப்பத்தை பயன்படுத்தியிருக்கலாம். ஆனால் சமாதான ஒப்பந்த காலத் தில் ஐயாயிரத்திற்கும் அதிகமான ஒப்பந்த மீறல்கள் புலி களால் மேற்கொள்ளப்பட்டன. களையெடுப்பு, துரோகிகள் அழிப்பு, துரோகியாக்குதல், மற்றும் தமிழ் மக்கள் மத்தியி லிருந்த புத்திஜீவிகள், மிதவாதத் தலைமைகள், அரசியலில் நடுநிலைமை வகிப்பவர்கள்,சமாதானப் பேச்சாளர்கள், எங்களது கோரிக்கைகளுக்கான ஊடகமாக இருக்கக்கூடிய வர்கள் எல்லாரையும் அழித்ததும் இந்த காலத்தில்தான்.
ஆதவன்: சமாதான ஒப்பந்தம் எப்படி அல்லது யாரால் முறிந்தது?
சுசீந்திரன்: போர் நிறுத்தக்காலத்தில், அதன் முக்கியத்து வத்தை, புலிகளோ புலிகளின் ஆதரவாளர்களோ உணரவேயில்ல. மக்களுக்கும் அதுபற்றி உணர்த்த வில்லை. 2006ம் ஆண்டு 'போரைத் தொடங்க வேண்டாம், சமாதானப் பேச்சுவார்த்தை¬யைத் தொடர்க' என்றே சர்வ தேசமெங்கும் குரல் இருந்தது. ஆனால் ஏப்றில் மாதம் இன்றைய இராணுவதளபதி சரத் பொன்சேகா மீது தற் கொலைத் தாக்குதல், அதற்கடுத்த மாதத்தில் பாதுகாப்பு அமைப்பின் செயலாளர்- ஜனாதிபதியின் சகோதரர் கோத பாய ராஜபக்ஷ மீது தற்கொலைத் தாக்குதல், பின்னர் யூன் மாதம் மாவிலாறு அணைத்தடுப்பு என்றவாறு புலிகளின் தாக்குதல்கள் அமைந்தன. போர் நிறுத்தம் என்பது ராணுவத் தந்திரோபாயம். 'எப்படியாவது இந்த போர் நிறுத்தத்தை அடுத்த ஐந்து வருடங்களுக்கு நீட்டியுங்கள் என்று பிரபாகரன் என்னிடம் தெரிவித்தார்' என்று அன்ரன் பாலசிங்கமே சொல்லியிருக்கிறார்.
திருகோணமலையில் கட்டப்பட்டுள்ள பெரிய அணையி லிருந்து மட்டக்களப்புக்கு போகின்ற துருசை மாவிலாறில் புலிகள் சமாதான காலத்தில் அடைத்துத் தடை செய்தனர். அது தண்ணீர் போக வேண்டிய காலம். சுமார் 30,000 ஏக்கர் பரப்புக்கு அந்த தண்ணீர் வழங்கப்படவேண்டும். அது தம் கட்டுப்பாட்டு பகுதிக்குள் இருந்தபடியால் புலிகள் நிறுத்தி னர். கர்நாடாகாவினர் காவிரியை தடுக்கிறபோது ஏற்படும் அவலம் தமிழக மக்கள் அறிந்ததுதானே? அதுபோலதான் மாவிலாற்றின் அணையில் இருந்து நீர்ப் பாய்ச்சலைத் தடுத்து சுமார் 15,000 குடும்பங்களின் வயிற்றிலடித்தார்கள். அதுவே சண்டையின் தொடக்கமாகவும் புலிகளது தோல்வி யின் தொடக்கமாகவும் ஆனது. இந்த ஆத்திரமூட்டலை புலி களுக்கு எதிரான தன் சர்வதேசப் பிரச்சாரத்திற்குப் இலங்கை அரசு நன்றாகவே பயன்படுத்தியது. அணையைப் பார்வை யிட வந்த மேற்குலக நாடுகளின் தூதுவர்கள் மீது புலிகள் வீசிய குண்டில் பலர் காயமடைந்தனர். அதற்குப் பின்னர் தான் கிழக்கின் மீதான யுத்தம் தொடங்கியது.
ஆதவன்: வடகிழக்கு என்பது வடக்காகவும் கிழக்காகவும் பிரிக்கப் பட்டதன் தொடக்கம் இதுதானா?
சுசீந்திரன்: அணையத் தடுத்து வன்னிப்பகுதிக்கு வாழ்வாதரப்பொருட்கள் வழங்கப்பட வேண்டுமெனக் கோரினர். ஆனால் நடந்ததென்னவோ கிழக்கு புலிகளிட மிருந்து பறிபோனதுதான். வடக்கும் கிழக்கும் இணைந்த மாகாணம் ஒன்றை இனி நாம் கனவு காண முடியுமா என்பது கேள்வியாகிவிட்டது. கிழக்கு மாகாணம் தொலைத் ததில் வேறு எவரையும் குற்றம் காணுவதைவிட புலிகள் தான் அதற்கான பொறுப்பையும் எடுக்க வேண்டும். ஏனெனில் தமிழர்களுக்குள் இருக்கும் சிறுபான்மை இனங் களையோ மாற்றுக்கருத்துக்களையோ வென்றெடுப் பதற்குப் பதிலாக அவர்களை அழித்ததும் அகற்றியதும் தான் புலிகளின் வரலாறு. அந்த சாதுர்யம் அவர்களுக்கு கைகூடி வரவில்லை. முஸ்லிம்களை வெளியேற்றினார் கள், மாற்றுக் கருத்தாளர்களை அழித்தனர். சிங்களப் பேரினவாத அடக்குமுறையினால் உருவாக்கப்பட்டது தான் தமிழ்ஈழக் கோரிக்கை. தொடர்ச்சியாக ஏற்பட்ட ஒப்பந்தங்களை நம்பி ஏமாற்றப்பட்ட தோல்விகளுக்குப் பின்னர்தான் ஆயுதப் போராட்டம் உருவானது. அதற்கான நியாயங்கள் எப்படி இருந்தபோதும் அதை ஒரு நியாயமான வழியில் வழிநடத்த புலிகள் தவறி விட்டனர். அதில் கிழக்கு பிரிந்தேவிட்டது.
ராஜீவ்-ஜே.ஆர். ஒப்பந்தத்தால் 13வது திருத்தச் சட்டம் ஏற்படுத்தப்பட்டது. அது அவசர அவசரமாக இலங்கையும் இந்தியாவும் ஒரு தீர்வுக்காக செய்து கொண்ட ஒப்பந்தம். அதன் நிமித்தமே தற்காலிகமாக வடக்கு கிழக்கு இணைந்து ஒரு மாகாணமாகச் செயற்பட வாய்ப்பு வழங்கப்பட்டது. இந்த இணைப்பினைச் சட்ட வலுவுள்ளதாக்க ஒரு சர்வஜன வாக்கெடுப்பு அந்த மாகாணங்களில் நடைபெற்றிருக்க வேண்டும். ஆனால் வடக்கு கிழக்கு இணைப்பை சட்டச் செல்லுபடியற்றது என்றாக்கி அதை பிரித்துவிட்டார்கள்.
( இதன் தொடர்ச்சிப்பகுதி அடுத்த பதிவாக தொடர்கிறது )
மிக நேர்த்தியான நேர்காணல். தொடருங்கள்.
எதிர்பார்த்திருக்கிறேன்.நன்றி